யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைக்கும் போதைவஸ்து; நாளைய தலைமுறை திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றதா?

த. சுபேசன்

கலாசாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதனை எம் கண்ணூடாக காண முடிகிறது.

வடக்கு மாகாணம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது பண்பாடும்-பாரம்பரியங்களும் மாத்திரமே.அந்தளவிற்கு கட்டுக்கோப்புடன் கலாசார விழுமியங்களை பின்பற்றிய தமிழர் தேசம் யுத்தத்திற்கு பின்னர் கட்டுக்கோப்புகளையும்-பண்பாடுகளையும் புறந்தள்ளி தறிகெட்டு தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
வடக்கு மாகாணம் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் அண்மைக் காலமாக போதைப்பொருட்களின் கூடாரமாகவும்-போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளின் இராஜ்ஜியமாகவும்  உருவெடுத்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாறான ஓர் நிலை ஏற்படும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
2009ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் வடக்கு மாவட்டத்திற்குள் ஊடுருவாத போதைப்பொருள் தற்போது பெருமளவில் ஊடுருவ யார் காரணம் என்ற கேள்வி இன்று ஒவ்வொருவர் மனதிலும் எழுக்கூடும். சில தமிழ் அரசியல் வாதிகள் பொது வெளியில் கூட இந்தக் கேள்வியை எழுப்பியுமுள்ளனர்.தமிழ்ப் பற்றுள்ள அனைவரதும் எதிர்பார்ப்பு அந்த கட்டுக்கோப்புடனான சமூதாயம் மீண்டும் மலர வேண்டும் என்பதே.
கலாசாரம்,பண்பாடு,பாரம்பரியம்,விழுமியம் என ஒழுக்கத்திற்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் இன்று இரவு நேர களியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதை விருந்து ஆகியன எம் கண்முன்னே நடந்தேறி வருகின்றன.வீட்டு வாசல் படியில் கால் வைக்க தயங்கிய பெண்கள் சமுதாயத்திற்கு இன்று இரவு நேர களியாட்டத்தில் தன்னை மறந்து ஆடவருடன் நடனமாடும் மனத் துணிவைக் கொடுத்தது யார்?
துணிவு தானாக வருகின்றதா அல்லது போதை மீதான மோகத்தால் துணிவு வர வைக்கப்படுகின்றதா?
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படுகிறது.போதைப்பொருள் வியாபாரம் என்பது நாம் எவரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வியாபகம் பெற்றுள்ளது.போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கையை இலக்கு வைக்கவில்லை.ஆனால் இலங்கை கடற்பரப்பை அண்மித்து ஏனைய நாடுகளுக்குள் இடம்பெறுகின்ற கடத்தலின் போது சிந்தப்படுகின்ற போதைப்பொருட்களே எமது நாட்டை ஆட்டிப்படைக்கின்றது என்ற ஓர் கருத்து நிலவி வருகின்றது.
அவ்வாறு சிந்தப்படுகின்ற ஒது துளி போதைப்பொருளே இந்தளவிற்கு நாட்டை சீரழிக்கின்றது என்றால் எமது நாடு அவர்களால் இலக்கு வைக்கப்பட்டால் எப்படிப்பட்ட பாதிப்புக்களை எதிர்நோக்கும் என்பதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை.
ஆனாலும் இன்று யாழ் மாவட்டத்திற்குள் பாடசாலை மாணவர்கள்,தனியார் கல்வி நிலைய மாணவர்கள் என இளைய சமுதாயத்தை சீரழிக்கும் நோக்கில் போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
கல்வி-விளையாட்டு என சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய வடக்கு மாகாணம் இன்று சகல விதத்திலும் பின்தங்கியுள்ளது.
இருப்பினும் இழந்ததை அடையும் விடாமுயற்சியில் எம் இனம் போராடி வருகின்ற இந்நேரத்தில் மற்றொரு பக்கத்தால் இளைய சமுதாயத்தை அடியோடு அழிக்கும் தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருள் கலாசாரத்தை இளைய சமுதாயம் மத்தியில் புகுத்தும் திட்டமிட்ட செயற்பாட்டினை சமுதாயமும்,பெற்றோரும் ஓரளவிற்கு உணரத் தலைப்பட்டு விட்டனர்.ஆனால் இளைய சமுதாயம் இதனை உணராவிட்டால் இந்த சமுதாயத்தை எவராலும் காப்பாற்ற முடியாது.உணர வேண்டிய இளைய சமுதாயம் இதனை ஓர் புதிய கலாசாரமாக எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.இந்நிலைமை தொடர்ந்தால் நாம் எதற்காக இதுவரை காலமும் போராடினோமோ அதற்கு ஓர் அர்த்தம் இல்லாத நிலைமை ஏற்பட்டு விடும்.
நாம் இதுவரை கஞ்சா,கசிப்பு போன்ற உள்ளூர் சட்டவிரோத உற்பத்திகளையே போதைப்பொருளாக அறிந்திருப்போம். ஆனால் இன்று ஹெரோயின்,ஐஸ்,போதை மாத்திரை என நாளுக்கு நாள் புதிய புதிய போதைப்பொருட்கள் மாவட்டத்திற்குள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன.
கடற்படை,இராணுவம்,பொலிஸ் போன்ற பாதுகாப்புத் தரப்புக்களால் இவற்றை தடுக்க முடியவில்லையா? அல்லது தடுக்க முயலவில்லையா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த போதைப்பொருள் கூட மாயமான சம்பவங்களும் நாட்டில் பதிவாகியுள்ளன.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப் பாவனையால் உயிரிந்துள்ளனர். இவர்கள் அனைவருமே 19வயதிற்கும் 30வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்தும் போது உயிரிழந்த சம்பவங்கள்,தொடர்ச்சியாக போதைப் பாவனையால் இதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.இவை அனைத்துமே வெறுமனே ஓர் செய்தியாகவே கடந்து விடுகின்றன.அதனால் இன்றும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.
போதைப்பொருள் பாவனையால் இன்று யாழ் மாவட்டத்தில் பல குடும்பங்களுக்குள் பிரிவுகள்,விவாகரத்து என இவை கொலைகளில் கூட முடிந்துள்ளன.அந்தளவிற்கு போதை எமது சமுதாயத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை வாழ்ந்த யாழ்ப்பாண சமூகம் அன்று ஒருவருக்கு ஒருவர் உதவியாக ,பக்கபலமாக இருந்து வந்திருந்தனர்.
ஆனால் இன்று பெற்ற தந்தை மகளை சீரழிக்கும் நிலைக்குள் நாம் தள்ளப்பட்டு விட்டோம்.ஆபத்திற்கு கூட உறவுகளை நம்பி பிள்ளைகளை ஒப்படைக்க முடியாத நிலை.அந்தளவிற்கு போதை எம்மவர்கள் கண்களை மறைத்து விட்டது.மனட்சாட்சியையும்-மனிதாபிமானத்தையும் குழி தோன்றிப் புதைத்து விட்டது.
இன்று யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை போதைபொருள் கடத்தல் காரர்களின் இலக்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்களை நோக்கியதாகவே இருந்து வருகிறது.அதிலும் பெருமளவில் இவ்வாறான மோசடிக்காரர்களின் வலையில் சிக்குவது வறுமை போன்ற காரணிகளால் பாடசாலைக் கல்வியை இடைநடுவே நிறுத்திய சிறுவர்களே.
கடந்த வார கணிப்பின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 600மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியிருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான மாணவர்களே வறுமை மற்றும் பிற காரணிகளால் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி எதிர்காலத்தில் அவர்கள் தமது வாழ்க்கையை சீரழித்துக்கொள்கின்றனர்.
போதை எனும் தற்காலிக இன்பத்தை அனுபவிக்க முற்பட்டு வாழ்நாளில் அவர்கள் வேறு எந்த இன்பத்தையுமே அனுபவிக்க முடியாமல் வாழ்நாள் அவஸ்தையை அனுபவித்து வருகின்றனர்.
உடல் மெலிந்து, குறுகி தமது அன்றாட கடமைகளைக் கூட மேற்கொள்ள முடியாதவர்களாக பலர் எம் சமூகத்தில் இன்று தாம் செய்த தவறை உணர்ந்து கண்ணீர் விடுகின்ற நிலை காணப்படுகிறது.
தாய் தந்தையரை பராமரிக்க வேண்டிய தருணத்தில் தாய்-தந்தை மகனை நினைத்து வாடுவதென்பது எவ்வளவு வேதனையான விடயம்.அந்த வேதனையை பல தாய்- தந்தையர் அனுபவிக்க போதைவஸ்து எனும் விஷம் காரணமாகிவிட்டது.
போதைவஸ்து பாவனையில் இருந்து விடுபட முடியாமல் இளைஞர்கள் தற்கொலை செய்த மற்றும் உயிர் மாய்க்கும் முயற்சிகளில் ஈடுபட்ட சம்பவங்கள் பல யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. ஒரு சொற்ப சுகம் வாழ்நாளையே நரகமாக மாற்றிவிடும்.அந்த சுகத்தில் திளைத்தவர்கள் அதில் இருந்து விடுபட நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை.அதுவே தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது.
போதையின் பிடியில் சிக்கி மீள்வதை விட அதன் பிடியில் சிக்காமல் தப்பிப்பதே புத்திசாலித்தனம்.
நாளைய சமுதாயம் இவ்வாறு வழி தவறி போதை எனும் பாழ் கிணற்றில் விழுந்து அழிவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஒருபுறம் திணைக்களங்கள்,மக்கள் நலன் சார்ந்த நிறுவனங்கள் போதை தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொண்டாலும் எங்கோ ஒரு மூலையில் போதையின் தாக்கம் வியாபித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
முளையிலே கிள்ளி எறிய வேண்டிய விடயத்தை விருட்சமாக வளர விட்ட தவறு அனைவரையுமே சாரும்.
போதையின் பிடியில் சிக்கி சிதைபவர்களை அதில் இருந்து மீட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்க வேண்டிய பொறுப்பு சமுதாயத்திடம் உள்ளது.அத்தோடு புதியவர்கள் போதையின் பிடியில் சிக்காமல் இருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.
கிராமங்களில்,பாடசாலை அருகாமையில் என இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களை பொலிஸாருக்கு இனங்காட்ட வேண்டிய பாரிய பொறுப்பு சமூகத்திடம் உள்ளது.
பொலிஸ்,இராணுவம்,மதுவரி என பல திணைக்களங்கள் போதையை கட்டுப்படுத்த இருந்தும் போதைவஸ்து பாவனை சமூகத்தில் மீளவும் துளிர் விட யார் காரணம் என்ற சந்தேகம் எம் அனைவர் மத்தயிலும் உண்டு.எனவே சமுதாயமாக இணைந்து இவ்வாறானவர்களை இணங்காட்டி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அத்துடன் பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம் ஆகியனவும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றி கல்வி உரிமையை தொடர வழிவகுக்க வேண்டும்.இதன் ஊடாக மாணவ சமுதாயத்தை மீட்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.
அத்துடன் சட்டங்களில் சில இறுக்கங்களை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திடம் உள்ளது.போதைவஸ்து விற்பனையாளர்கள் இலகுவில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து மீளவும் சமுதாயத்தை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருக்கும் வகையில் அவர்களுக்கான தண்டனை அமைய வேண்டும்.இதனூடாகவே போதையின் கோரப் பிடியில் இருந்து நாட்டை மீட்க முடியும்.
நாளைய தலைமுறையினர் திசைமாறிச் சென்றால் எமது அத்தனை போராட்டங்களும் வீணாகி விடும் .தமிழ் இனத்தின் இருப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.போதை காட்டுத் தீ போன்று பரவக்கூடியது. எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.போதை ஆரம்பத்தில் ஆக்ரோஷத்தை கொடுத்தாலும் அது மெல்ல மெல்ல கொல்லும் விஷ கிருமி.எனவே அதனை முளையிலே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.
யுத்த வடுக்களில் இருந்து மீண்டு படிப்படியாக கல்வி,பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் சமூகம் நாம்.போதைவஸ்திற்கு இடமளித்து மீண்டும் வீழ்ந்த இனமாக மாறி விடக்கூடாது என்பதில் நாம் அனைவருமே உறுதியாக இருக்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.