ஜனாதிபதி ரணில் இம்முறையாவது எமது கோரிக்கையை கருத்திற்கொள்ளவேண்டும் கலாநிதி ஆறு.திருமுருகன் உருக்கம்

 

ஜனாதிபதி இம்முறையாவது எமது கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் கருத்திற் கொள்ள வேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு –

கடந்த ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் சைவ மக்கள் சார்பில் தங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வேளை தங்களிடம் விடுத்த வேண்டுதல்கள் எவையும் நிறைவேறவில்லை.

குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணுதல்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள பொதுமக்களின் நிலங்களை விரைவில் விடுவித்தல்.

கீரிமலை காங்கேசன்துறை வீதியில் ஜனாதிபதி மாளிகை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள சைவ ஆலயங்கள் மடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீளவும் அவ்விடங்களில் பொதுமக்கள் சென்று தமது வழிபாட்டு இடங்களை உரிய முறையில் பயன்படுத்த அனுமதிக்குமாறு வேண்டப்பட்டது.

காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியில் இருந்த சுக்கிரவார திருகோணச்சத்திரம் இடிக்கப்பட்டு அந்நிலம் தல்செவன இராணுவ ஹோட்டல் பயன்பாட்டில் இருந்து மீளவும் சைவ சமய மடம் அமைப்பதற்கு நிலத்தை கையளிக்க வேண்டும்.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் பொதுமக்களின் காணிகள் பல இராணுவ முகாம்களாக உள்ளன. அவை எவையும் மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவில்லை. அவற்றைக் கையளியுங்கள்.

இவ்விடயங்கள் தொடர்பாக தாங்கள் உடன் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

இவற்றில் எவையும் தங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டனவாக இல்லை.

இம்முறையாவது இவற்றைக் கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வாருங்கள்.

தாங்கள் பதவியேற்றவுடன் பகிரங்கமாக அறிவித்தீர்கள் விரைவில் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதாக. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எவ்வித முயற்சியும் நடைபெறுவதாக நாம் அறியமுடியவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.