கிழக்குமாகாண தபாலக நிர்வாக கட்டட தொகுதி மட்டக்களப்பில் அமைச்சர் பந்துலவினால் திறப்பு!
கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு சுமார் 45 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 5 மாடிகள் கொண்ட கிழக்கு மாகாண தபாலக நிர்வாக கட்டடத் தொகுதி சனிக்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் முகமத் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் போக்குவரத்து ஊடகத்துறை நெடுஞ்சாலைகள் தபால்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த புதிய அஞ்சல் கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.
இந்த அஞ்சல் கட்டடத் தொகுதி இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் அதற்கு இடை செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் சிவனேசன், இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, அதிபர் எஸ் சரத்குமார, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ. முரளிதரன் மற்றும் மத குருமார்கள், அரசாங்கத் திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் புதிய கட்டட தொகுதியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் பிரிவு மாத்திரமன்றி, அலுவலகம், வாகன நிர்வாக கணக்கிட்டு பகுதி, மாகாண அஞ்சல் பயிற்சி நிலையம், மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் என்பனவும் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை