ரணிலின் வடக்கு விஜயம் ஒரு வெற்றுப் பயணமாம்! யாழில் பிமல் ரட்ணாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத -மக்களின் வரிப்பணத்தை வீணடித்த – வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை.

நான் கொழும்பிலிருந்து வருகை தரும்போது வடக்கு அதிகாரிகள் சிலருடன் கதைத்தேன் ஜனாதிபதி விஜயம் அவ்வாறு இருந்தது என அவர்கள் கூறினார்கள் வாகனப் பவனியை கண்டு இரசித்ததாகக் கூறினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ். விஜயத்தை எதிர்த்து யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம் நடைபெற்றது.

ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போராட்டக்காரர்களை பொலிஸார் இழுத்துச் சென்றதையும் தாக்குதலுக்கு தயாராக இருந்த பொலிஸாரையும் ஊடகங்களின் ஊடாகப் பார்த்தேன்.

நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி கதிரையிலிருந்து மக்கள் விரட்டியடித்த போது ரணில் விக்கிரமசிங்க பின் கதவால் ஜனாதிபதியானார்.

நாட்டை முன்னேற்றப் போகிறேன் எனக் கூறிக்கொண்டு நாட்டு வளங்களை வெளிநாட்டுக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகிறார்.

நாட்டைப் பாதுகாப்பதற்காக பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர் மேற்கொள்ளும் போராட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் மூலம் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என அரசமைப்பு கூறுகின்றது.

இவ்வாறான நிலையில்  ஜனாதிபதி கதிரையில் மீண்டும் அமர்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வடக்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

வட மாகாணத்தின் வளம் மிக்க பகுதிகளான மன்னார், பூநகரி, தீவகம் போன்ற பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அப் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

நாடு பொருளாதார ரீதியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்  ஜனாதிபதி ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாள்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சினையைத் தீர்க்க அல்ல எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரமே என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.