சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கவே செங்கடலில் இலங்கை போர்க் கப்பல்! ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

 

செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால் கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, இறக்குமதி பொருள்களின் விலை அதிகரித்து விடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே போர் கப்பலை அனுப்புகின்றோம், மாறாக இரு நாட்டின் போரில் பங்குதாரர்களாக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது மேலும் கூறிய ஜனதிபதி –

செங்கடல் ஊடாக இலங்கை வரும் சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலானால் கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் அனைத்துத் துறைமுகங்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். எனவே பன்னாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே தான் இலங்கை கடற் படையின் போர்க் கப்பலை செங்கடலின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கினேன். மஹா பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சி காலத்திற்குப் பின்னர் சர்வதேச கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை போர்க் கப்பலை அனுப்புவது இதுவே முதல் தடவையாகும்.

செங்கடல் பாதுகாப்புக்கான செலவீணங்களை கருதி நாம் விலகினால் இலங்கைக்கு சர்வதேசக் கப்பல்களின் வருகை குறைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே செங்கடலில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து சுமுகமாக இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக போர்க் கப்பலை அனுப்புகின்றோம்.

மாறாக, இரு நாடுகளுக்கு இடையிலான போரில் ஒருதரப்புக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இலங்கை செங்கடலுக்கு கப்பலை அனுப்ப வில்லை. பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் பலவும் செங்கடல் ஊடான பன்னாட்டு சரக்கு கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக தனது போர் கப்பல்களை ஏற்கனவே அனுப்பியுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செங்கடல் ஊடான போக்குவரத்தைப் பயன்படுத்தாது வேறு கடல் மார்க்கங்களை பயன்படுத்துகின்றன. இதனால் கடல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்கு செங்கடல் ஊடாக நேரடியாக வர வேண்டிய கப்பல்கள் தென் ஆபிரிக்காவை சுற்றிவரும் போது, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த பிரச்சினையை எளிதானதொரு விடயமாகக் கருத முடியாது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எரிபொருள் கப்பல் ஒன்று வரும் வரை காத்திருந்த இலங்கை, இன்று சர்வதேச கடல் பாதுகாப்புக்கு கப்பலை அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடலில் இலங்கை கடல் படையின் போர் கப்பலும் சிறப்பு படையினரும் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.