விடுதலை புலிகள் காலத்தில் அடக்குமுறைகள் இல்லை! து.ரவிகரன் சுட்டிக்காட்டு
விடுதலைப் புலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இருக்கவில்லை என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும் வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டு வரும்போது வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் இணைந்து அந்தந்த மாவட்டங்களில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் நடத்தன. இதன்போதே இரு பெண்களை கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைக்காக வருவதென்றால் தேர்தல் நடவடிக்கைக்காக வந்து பிரசாரத்தை செய்தால் அது வேறு, ஆனால் நீதியை நிலைநாட்டாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயத்தில் மட்டுமல்ல நில அபகரிப்பு, கடலில் மீன்பிடித்தல், சகல தீர்வுத்திட்ட விடயங்களிலும் அவர்களுக்கான தீர்வை வழங்காமல் ஜனாதிபதி என்ற பேரில் இங்கு வந்து சிரித்துக் கொண்டு புகைப்படம் எடுப்பதற்காகவே யாழ்ப்பாணம், வன்னிக்கு வருகிறீர்கள் என்றால் நாட்டை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதனை யோசித்துப் பாருங்கள்.
பொருளாதாரப் பிரச்சினையால் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் நாடு சின்னாபின்னமாகி உள்ளது. யுத்தம் மௌனித்து 16 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கான தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை. தீர்வுகளை வழங்கி விட்டு இங்கு வந்து போட்டோக்கு போஸ் கொடுங்கள்.
ஜெனிற்றாவுக்கு விடுதலை வேண்டும் பொலிஸாரின் அராஜகம் என இவர்கள் சொன்னது உண்மை, பொலிஸார் மேலிடத்து உத்தரவால் அடக்கு முறையாக செயற்படுகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறு அடக்குமுறைகள் இல்லை. எங்களுடைய நிலங்கள், மதங்கள், கடல்கள் காப்பாற்றப்பட்டன. தீர்வுத் திட்டங்கள் என்று கூறி ஏற்றுக் கொண்டதே தவிர இன்று அரசாங்கம் நடந்து கொண்டிருப்பதை உலக நாடுகள் கண்காணித்து எங்களுக்கான தீர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை