மருந்து மோசடியுடன் தொடர்புபட்டவர்களை பாதுகாத்த அனைவரும் தேசத்துரோகிகள்! சஜித் பிரேமதாஸ சாட்டை

மருந்து கொள்வனவு திருட்டில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவையும் இந்தக் குழுவையும் பாதுகாக்க 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளை தூக்கினர். இந்த 113 பேரும் நாட்டுத் துரோகிகள், தேசத் துரோகிகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

அரசாங்கத்தின் புள்ளிவிவர தகவல்களின் பிரகாரம், நாட்டில் 60 வீத குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதுடன், 91 வீத செலவினங்கள் அதிகரித்துள்ளன.

பொருளாதார வங்குரோத்து நிலையால் 22 வீத குடும்பங்கள் கடனால் பாதிக்கப்படும் போது, 3 முதல் 21 வயது வரையிலான பாடசாலை செல்லும் வயதினரில் 54.9 வீதமானவர்கள்  பொருளாதார வங்குரோத்து நிலையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.

7 வீதமான மக்கள் தமது சுகாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் வழமைக்கு மாறான போக்கைக் கையாண்டு வரும் நிலையில்,நாட்டில் பரிதாபகரமான மற்றும் அவலகரமான நிலைமைகள் உருவெடுத்துள்ளன.

இந்நிலையில் நாட்டை வங்குரோத்தடையச் செய்த குழுவினரால் நாட்டை சரியான முறையில் கட்டியெழுப்ப முடியுமா இல்லையா என்பது துறைமுக அதிகார சபையின் கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடல் நடுவில் நடத்திய விருந்து கொண்டாட்டத்திலிருந்து புலப்படுகிறது. நாட்டு மக்கள் நிம்மதி இழந்து இருக்கும் இவ்வேளையில் நாட்டு மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி கடலில் மதுபான விருந்து கொண்டாட்டங்களை நடத்தும் கேவலமான அரச ஆட்சியே நாட்டில் இருக்கிறது.

அத்துடன் தரமற்ற ஹியுமன் இம்யூனிகுளோபியுயின் மருந்து கொள்முதல் ஊழல் உட்பட இந்நாட்டிலிருந்து மருந்துகளைத் திருடிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை முன்னெடுத்துச் சென்றாலும்,இந்தத் திருட்டில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சரையும் இந்தக் குழுவையும் பாதுகாக்க 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளை தூக்கினர். இந்த 113 பேரும் நாட்டுத் துரோகிகள், மக்கள் துரோகிகள். இந்த 113 பேரும் திருட்டுக்கு மோசடிக்கு ஆதரவாக முன் நிற்கிறார்கள்.

2020 இல் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய 100 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மறுத்த போது வாயை மூடிக்கொண்டு இருந்த அமைச்சர் பந்துல  குணவர்தன, தற்போது சர்வதேச நாணய நிதியம் கூறுவதற்கு இணங்கி அவ்வாறே முன்செல்வோம் என கூறுவது ஆடை அணிந்து கொண்டா எனக் கேட்கிறோம்.

ஆனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை முன்னிலைப்படுத்தி மக்களை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தி வருகிறது, வற்வரடியை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கவில்லை. ஆனால் அரசாங்கத்துக்கு அரச வறுமானத்தை அதிகரித்துக்கொள்ள வழி தெரியாமல் மக்கள் மீது வரிக்குமேல் வரி அதிகரித்துள்ளது. மக்களின் கஷ்டம் இந்த அரசாங்கத்துக்கு விளங்குவதில்லை. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.