அஸ்வெசும நலன்புரி இரண்டாம் கட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் குறித்து அவதானம்! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது பெருந்தோட்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக பேச்சில் ஈடுபட்டுள்ளார். வெகுவிரைவில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் மந்த போசனை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுக்குமார், அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வைத்தியர்கள் மற்றும்  பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா நாளாந்த  சம்பளம் வழங்கப்படுகிறது.வற் வரி 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.ஆனால் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஏன் பெருந்தோட்ட மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த  நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதார பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வரவு செலவுத் திட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய  அரச சேவையாளர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.இந்த அதிகரிப்பை எதிர்வரும் ஏப்ரல்  மாதம் முதல் அமுல்படுத்த  தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொருளாதார நிலைமை சாதகமாக உள்ளதால் இந்த மாதம் 5000 ரூபாவை முதல் தவணையாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது பெருந்தோட்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக பேச்சில் ஈடுபட்டுள்ளார். வெகுவிரைவில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.