மக்களை ஒடுக்க முயற்சிக்கும் சட்டமூலங்களை எதிர்க்கிறோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திட்டவட்டம்

ஊடக நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், ஜனநாயகத்திற்காக செயற்படும் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்ற தரப்பினர் எதிர்க்கட்சியின் பல பிரதான கட்சிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெளிவான முடிவை எட்டிள்ளனர்.

இதன் பிரகாரம், அரசாங்கம் முன்வைத்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை தானும் தனது குழுவினரும் முற்றாக நிராகரித்து இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு  தெரிவித்தார்.

குழந்தைகள், தாய்மார்கள், பொது மக்கள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், இதுபோன்ற ஜனநாயக விரோத சட்ட விதிமுறைகளைக் கொண்டு வந்து,அரசாங்கம் நாட்டில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டி, பேச்சு சுதந்திரம், கலந்துரையாடல் சுதந்திரம், ஒன்று கூடி பேசும் சுதந்திரம், தகவல் அறிதலுக்கான சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகள் போலவே,அடிப்படை உரிமைகளை மீறும் கடுமையான ஜனநாயக விரோத நடைமுறைக்கு பிரவேசித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நாட்டுக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டிய போதிலும், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர் கட்டமைத்த பிம்பம் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.இந்தச் சட்டத்தின் மூலம்,அவரும் அவர் நியமிக்கும் ஆணைக்குழு உறுப்பினர்களும்,அவர் நியமிக்கும் பாதுகாப்புப் படையினரும் இந்நாட்டின் சாதாரண மக்கள் மீது தம் இஷ்டத்துக்கு ஏற்றால் போல் அழுத்தம் கொடுக்க முடியும். ‘பேசினால் சிறை செல்ல வேண்டிவரும்’ என்ற அச்சத்தை ஏற்படுத்தி மக்களை வாயடைக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி கையாண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி உண்மையான ஒரு ஜனநாயகவாதியாக இருந்தால், இந்த மோசமான சட்டமூலத்தை வாபஸ் பெற்று, சகல பங்குதாரர்களுடனும் பயன்பெறும் உகந்த கலந்துரையாடலில்  ஈடுபடுமாறும், இந்நாட்டிலிருந்து சமூக ஊடகங்களைக் காணாமலாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபடாது, தெளிவான ஜனநாயக வேலைத்திட்டத்தை அணுகுவது விரும்பத்தக்கது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை மதிக்கும் மாற்று அரசாங்கமான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் ஆணை மூலம் ஆட்சிக்கு வந்தவுடன், தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்ட சகல  ஜனநாயக விரோத சட்டங்களையும் நீக்கி  ஜனநாயகம் நிலைநாட்டும். அதுவரை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு தூதுவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், இந்த ஜனநாயக விரோத சட்ட ஆணைகளைத் தோற்கடிக்க ஜனநாயக ரீதியாகவும் அமைதியான முறையிலும் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.