வவுனியா வடக்கு கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்துக்கான குடிநீர் தாங்கி திறந்துவைப்பு

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின்தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நீண்ட காலத்துக்குப் பின்னர் தீர்வு காணும் வகையில் குடிநீர் தாங்கி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கோயில்புளியங்குளம் மஹா விஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்களின் நிதிப் பங்களிப்பில் வவுனியா ஊடகவியலாளர்களால் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கி பாடசாலை அதிபர் முன்னிலையில் நேற்று (25) திறந்துவிடப்பட்டது.

இதன்போது, அதிதிகள் இந்த குடிநீர் தாங்கியை திறந்துவைத்ததுடன், பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்தனர்.

அதனை தொடர்ந்து, அதிதிகளால் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

அத்தோடு, இந்நிகழ்வின் நினைவாக மர நடுகையும் இடம்பெற்றது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீரின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர் தேசத்தில் தற்போது வசிக்கும் வவுனியா, கோயில்புளியங்குளம் மஹா விஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய, அவரால் வழங்கப்பட்ட நிதியின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவப்பட்டது.

பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சிவில் சமூக பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.