நுவரெலியா கிரகரி வாவியில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, வாவியில் மிதந்த சடலத்தை பார்வையிட்ட பொலிஸார், 64 வயதுடைய இராமன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, நுவரெலியா மாவட்ட நீதிவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதையடுத்து, சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது எவராவது கொலை செய்து வாவியில் எறிந்துவிட்டுச் சென்றார்களா என்பது தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின்னர், சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.