உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

 

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் குறித்து தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறு‍கையில் –

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் காரணமாக டிஜிற்றல் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

உலகில் 137 நாடுகளில் இந்தச் சட்டம் செயற்பட்டு வருகிறது. அப்படியாயின், அந்த நாடுகளில் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவம் இல்லை. அதனால் இதனை அரசியலாக்க வேண்டாம். ஒட்டுமொத்த இலங்கை நாகரிகத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் இந்த விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், உலகில் 194 நாடுகளில் 137 நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இருக்கும் சட்ட திட்டங்களைவிட மிகவும் இலகுவானதாகும். அதன் பிரகாரம் இலங்கையின் நாகரிகம் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்ட திட்டங்கள் போதாது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் போன்று இதனைச் செயற்படுத்த வேண்டியிருக்கிறது.

மேலும், இந்தச் சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்களை உள்வாங்குவோம். அவ்வாறு உள்வாங்காமல் இருப்பதாக இருந்தால் அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். என்றாலும், உயர்நீதிமன்றம் சில பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாக எதுவும் இடம்பெறப்போவதில்லை.

அத்துடன், இந்தச் சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். உலக நாடுகளிலும் இதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கையில் கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டம், சிங்கப்பூரில் இருப்பதை விட கடுமையானது அல்ல. சிங்கப்பூரில் சில விடயங்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வரை தண்டப்பணம் விதிக்க முடியும். அந்தளவு கடுமையான சட்டமல்ல.

மாறாக, அவற்றை விட இலகுவான, ஜனநாயக ரீதியான, பிரித்தானிய அரசமைப்புக்கு அமைய, இந்தியாவின் அரசமைப்புக்கு அமைய ஆசிய நாடுகளின் அரசியலமைப்புகளுக்கு அமைவாக மிகவும் தளர்வான அளவே இந்த சட்டமூலத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.