சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை குடும்பத்துடன் இணைக்க நடவடிக்கைகளை எடுக்குக! இந்திய, இலங்கை அரசிடம் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளவை வருமாறு –

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டபோதும் அவர்கள் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சிறைக்கைதிகள் போல தமது வாழ்வை அனுபவித்து வருகின்றார்கள்.இவர்களில் இலங்கையை சேர்ந்தவர்கள் தாங்கள் இலங்கைக்கு சென்று குடும்பத்தவர்களுடன் இணைந்து வாழகோரிக்கை விடுத்துள்ள போதிலும் இன்றுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் சாந்தன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மூன்றாம் திகதி இந்திய துணைத்தூதுவரை சந்தித்து இந்திய உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழவழிசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில் சுகவீனம் காரணமாக சாந்தனின் உடல்நிலை மோசமடைந்துள்ளமை அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீளத்திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவணம் செய்யவேண்டும் எனவும் குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்சநீதிமன்றால் விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.