மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்   கனடா சர்வம் அமைப்பு விசேட சந்திப்பு! கல்முனை ஆதார வைத்தியசாலையில்

( வி.ரி.சகாதேவராஜா)

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன்  கனடா சர்வம் அமைப்பு கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வொன்றை நடத்தியது.

கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக வைத்தியசாலையின் அத்தியட்சகர்; வைத்தியர் இரா.முரளீஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக சர்வம் அமைப்புடன் இணைந்து தங்களது இலவச பராமரிப்பு சேவையை  அர்ப்பணித்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்;என்.ரொஷாந்த், உளநல பிரிவு மருத்துவர் வைத்தியர் யூ.எல்.சராப்தீன், இயன்மருத்துவப் பிரிவு உத்தியோகத்தர்களான ஜி.சந்திரகாஷன், ஏ.ஹொட்ஷன், பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை உத்தியோகத்தர் செல்வி வை.எம்.யூ. யாபா, தொழில்சார் சிகிச்சை உத்தியோகத்தர் செல்வி எம்.ரி.நஸ்ரின், குழந்தைநல விடுதி வைத்தியர்கள்  விசேட பிரிவு ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விசேட உரையினை கல்முனை  ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் நிகழ்த்தினார். தனது உரையில் இந் நிகழ்வுகள் ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியதாகவும் இவ்வாறான நிகழ்வுகள் மூலம் சேவையாளர்களை பாராட்டி கௌரவிப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சர்வம் அமைப்பின் பிரதிநிதியாக இலங்கையின் நிதி நிருவாகிகளில் ஒருவரான எஸ்.ஹேமதாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் சிகிச்சையின் ஆரம்பத்தில் தான் தூக்கிய குழந்தை கஷ்மிதா தற்போது நடந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக குறிப்பிட்ட அவர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

தொடர்ந்து விசேட பிரிவு குழந்தைகளின் பாடல், நடன நிகழ்வுகள், பேச்சு என்பன நடைபெற்றன. குழந்தைகளின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது.

விசேட தேவையுடைய குழந்தை ஒருவரின் தாயார் சுஜித்ரா என்பவரால் நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கப்பட்டது. அவர் தனது உரையில் தவறாது சிகிச்சையைத் தொடர்வதற்கு உதவி வரும் தந்தையர்களுக்கு நன்றி கூறியதோடு மட்டுமல்லாமல் அனைவருடைய உழைப்பும், சிகிச்சை நிலைய முகாமையாளர் ஜீவராணியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் உதவியதாகவும் கல்முனை சிகிச்சை நிலையத்தில் சில தந்தையர் இக் குழந்தைகளின் வளர்ச்சியில் பாடுபட்டு வருவதாகவும் பங்குபற்றியவர்களை ஊக்குவித்தும் இந் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளித்த தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டுமன்றி அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து தனது நன்றியுரையாற்றினார்.

வைத்தியசாலையின் தாதியபரிபாலகர் என்.சசிதரன், தாதியபரிபாலகி திருமதி எல்.சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்;தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.