தென்கிழக்கு பல்கலை 16 ஆவது பட்டமளிப்பு 10, 11 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாகத்தில்!

 

-கே.ஏ. ஹமீட்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா தொடர்பில் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறினார்.

மேற்படி பட்டமளிப்பு விழா, ஒவ்வொரு நாளிலும் தலா மூன்று அமர்வுகளாக நடைபெறும் என்றும், மொத்தமாக 2152 பேருக்கு, இதன்போது பட்டங்கள் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பேரும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பேரும் மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பேரும் – பட்டம் பெற உள்ளனர்’ என, உபவேந்தர் கூறினார்.

இரண்டாம் நாளில் இடம்பெறவுள்ள நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பேரும், ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடத்தை சேர்ந்த வெளிவாரி மாணவர்கள் 350 பேரும் ஆறாவது அமர்வில் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி மாணவர்கள் 361 பேரும் பட்டங்கள் பெறவுள்ளனர்.

இதனடிப்படையில் மொத்தமாக 1441 உள்வாரி மாணவர்களும், 711 வெளிவாரி மாணவர்களுமாக மொத்தம் 2152 பேருக்கு – இந்த விழாவில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழா – தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலில், பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ளது.

பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதி பேட்ரிக் மெக்னமாறா மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித்தலைவரும் சிரேஷ்ட பேராசியருமான சந்தன உடவத்த ஆகியோர் கலந்துகொண்டு பிரதான உரைகளை ஆற்றவிருக்கின்றனர்.
தொழிநுட்ப பீடத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் பியசிறி மேற்படி பட்டமளிப்பு விழாவின் போது, கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முதல்தடவையாக பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக இந்தப் பட்டமளிப்பு விழா – நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் உபவேந்தர் ரமீஸ் தெரிவித்தார். இதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட இணையத்தள பக்கமும் ஊடக சந்திப்பின் போது – போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஊடக சந்திப்பில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.பி.எம். இஸ்மாயில், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், ஊடக பிரிவு இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.