அனர்த்த பாதுகாப்பு அவசர செயற்பாடு ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடல்!

தேசிய சாரணர் ஜம்போரிக்காக

ஹஸ்பர் ஏ.எச்

தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனர்த்த பாதுகாப்பு மற்றும் அவசர செயற்பாட்டுத்திட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் (15) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

தேசிய சாரணர் ஜம்போரியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய சுருக்கமான அறிமுகம், அவசர நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு  ஏற்பாடுகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் மதிப்பாய்வு மற்றும்  கடமைகள் போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், எதிர்பார்க்கப்படும் அபாயங்கள், அவசரநிலை மற்றும் பாதுகாப்பு, அவசர ஒருங்கிணைப்பு, வானிலை கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறைமை,  பேரிடர்களுக்கான வெளியேற்ற மையங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் முதலுதவி, தீ பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசர உபகரணங்கள் மற்றும் பொருள்கள், முக்கிய அவசர வசதிகள் மற்றும் பொறுப்புகள் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, குறித்த துறைசார் அதிகாரிகள், முப்படைகளின் பொலிஸ் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.