பேத்தாழை பொது நூலக வருடாந்த பரிசளிப்பு விழா!

கோறளைப் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொது நூலகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சனிக்கிழமை பேத்தாழை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.

தேசியக் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிச் சான்றிதழ்களை பிரதம அதிதியாக நிகழ்விற்கு வருகை தந்திருந்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் வழங்கி வைத்தார்.

அத்துடன், பேத்தாழை பொது நூலகம் மற்றும் விபுலானந்தர் கலை இலக்கிய மன்றம் ஆகியவை இணைந்து கல்குடா கல்வி வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய ‘அறிவுத் தேடல்’ கலை இலக்கிய வினா விடைப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட விரிவுரையாளர் ஜீ.பால்ராஜ், கிழக்குப் பல்கலைக்கழக கல்விமாணி சிறப்புக் கற்கை மாணவன் கே.பிரசாந்த் ஆகியோர் நடுவகம் செய்திருந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த அறிவுசார் போட்டியில் மட்ஃககுஃவாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் மட்ஃககுஃகிரான் மத்தியகல்லூரி மாணவர்கள் மோதியிருந்த நிலையில், மட்ஃககுஃகிரான் மத்தியகல்லூரி மாணவர்கள் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டனர்.

இவர்களுக்கான வெற்றிச் சின்னமாக பேத்தாழை விபுலானந்தர் கலை இலக்கிய மன்றத்தின் தனித்துவ பாராட்டுச் சின்னமான ‘மகரயாழ்’  மகுடத்தை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில்  கோறளைப் பற்று பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்.ட ஜனாப். அ.ஹாரூன் மற்றும் கிராம உத்தியோகத்தர், பிரதேச பாடசாலை அதிபர்கள், பேத்தாழை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் (தெற்கு), பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச நூலகப் பொறுப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.