திருமலை மாவட்டத்தில் புண்ணிய கிராம நிகழ்வு

எப்.முபாரக்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் வழிகாட்டலின் கீழ் கந்தளாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து கந்தளாய் பிரதேசத்தின் அனைத்து சமய ஆலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளின் பங்களிப்புடன்  கந்தளாய் சோழீஸ்வர் (சிவன்) ஆலயத்தில் புண்ணிய கிராம நிகழ்வு இடம்பெற்றது.

ஆலய பூஜை, கோமாதா பூஜையை தொடர்ந்து நந்திக்கொடியேற்றி அறநெறி கீதம் இசைத்து மங்கள விளக்கேற்றி  இறைவணக்கத்துடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

ஆசியுரையை தொடர்ந்து வரவேற்பு நடனம், தனி நடனம் மற்றும் பேச்சு போன்ற கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுன.
பங்குபற்றிய அறநெறி மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நான்கு இன மத குருமார்களும் மற்றும் நான்கு இன அறநெறி பாடசாலை மாணவர்களும் இதன் போது கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, கந்தளாய் உதவி பிரதேச செயலாளர் உ.குமணன், மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், சோழீஸ்வரர் ஆலய (சிவன் ) தலைவர் , அறநெறி பாடசாலை மாணவர்கள், முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், விக்னேஸ்வரா அறநெறி பாடசாலை மாணவர்கள், சோழீஸ்வரர் ஆலய (சிவன் ) அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.