வவுனியாவில் 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதையுடன் ஒருவர் கைது!

வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்குக்; கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி  தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான கீர்த்தி ரத்தின, சொய்சா, டிசாநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான குமார, விதுசன் ஆகியோரால் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் விசேட சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது 80 ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.