இலங்கை சாரணர் சங்கத்தின் 10ஆவது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்கேற்பு

இலங்கை சாரணர் சங்கத்தின் 10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் யாழ். மாவட்டத்திலிருந்து 11 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சாரணர்களை கெளரவித்து அனுப்பிவைக்கும் நிகழ்வு  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் திங்கட்கிழமை (19) பிற்பகல் யாழ் பழைய பூங்காவில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் போது யாழ். மாவட்ட சாரணர் கொடிக்கான சாரணர் அணிவகுப்பு இடம்பெற்றதுடன், சாரணர்களுக்கான சீருடைகள் மற்றும் ஜம்போறியில் பங்குபற்றும் சாரணர்களுக்குத் தேவையான உணவுப்பொருள் என்பன கௌரவ ஆளுநர் அவர்களால் வழங்கி வைக்கப்ட்டன.

நிகழ்வில் உரையாற்றிய கெளரவ வட மாகாண ஆளுநர் அவர்கள், திருகோணமலைக்குப் புறப்படும் சாரணர் சிறார்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், சாரணர் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துள்ள பாடசாலைகளையும் . பாராட்டினார்.

நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்களாக வடக்குமாகண ஆளுநரின் செயலாள‌ர் திரு.எம் நத்தகோபாலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு .எம் .பற்றிக் டிறஞ்சன்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.