சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம்

ஒவ்வொரு ஆண்டும்  பெப்ரவரி மாதம் 20 திகதி “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்கிழமை (20) நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம், சமூக அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம், கண்டி சமூக நிர்வாகத்தின் ஒன்றியங்கள் இணைந்து நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என இன மத கட்சி பேதமின்றி நுவரெலியாவில் ஒன்றுகூடியவர்கள் சர்வதேச நீதி தினத்தில் தமது கோரிக்கை அடங்கிய வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுவாக தமிழர்களை இந்திய தமிழர்கள் எனக் கூறுகின்றனர் நாட்டில் மலையகம் 200 என பல இடங்களில் பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இருந்தும் இன்று வரை இலங்கைத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என யாரும் கூறுவதில்லை. எனவே இன்று முதலாவது தமிழர்களாகிய எங்களை இலங்கைத் தமிழர்கள் மலையக தமிழர்கள் என அடையாளப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர். அத்துடன், ஒரே தடவையில் 1,300 புதிய வீடுகள் அமைப்பதற்கான “பாரத் – லங்கா வீடமைப்பு” திட்டம் இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதிலும் மலையகம் மக்களுக்கும் எவ்விதமான பாரபட்சமின்றி வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் போது முன்வைத்தனர்.

அத்துடன் மலையக மக்கள் குடியேறி 200 வருடங்ளாகிவிட்டது. எங்களுக்கு உரிமை இல்லையென்று ஒப்பாரி வைக்கமாட்டோம். எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் பல வழிகளில்  போராடுவோம் என கூறினர்.