அச்செழுவில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்து இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு  10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டின் குடும்ப தலைவர் மற்றும் அவரது  சகோதரர் பலத்த வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளாகி கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

44 வயதுடைய முருகையா மோகனதாஸ், 45 வயதுடைய முருகையா ஜெயமோகன் ஆகிய இருவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த 20 பேர் கொண்ட கும்பல்,  கூரிய ஆயுதங்கள் மூலம் கதவை உடைத்து உள்ளே புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அபகரித்து சென்று,  பிரதான வீதியில் வைத்து தீ மூட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேகத்தில் வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்