30 வருட யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் கடமையாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான்

30 வருட யுத்த காலங்களில் இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றிய அதிகாரிகள் சிரேஸ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்  என  அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அலுவலகத்தில்  நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –

இலங்கை நிர்வாக சேவையில் இருந்து அரசாங்க அதிபர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தற்போது ஓய்வு பெற்று மீண்டும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க  அதிபரான சேவையில் இணைந்துள்ளார்.அவருக்கான  பாராட்டு நிகழ்வுகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.கடந்த 30 வருட யுத்த சூழ்நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் உயிரை துச்சமென மதித்து கடமையாற்றிய நிர்வாக சேவை அதிகாரிகள்  அரசாங்க அதிபர்களும் அதே போல் கிழக்கு மாகாண சபையில்   பிரதம செயலாளராக இருந்து பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட ஹேரத் அபயவீர மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட  காத்தான்குடி பிரதேச செயலாளர்  மர்ஹூம் ஏ.எல்.எம் பளீல், திருக்கோவில் பிரதேச செயலாளர் தவராஜா, அரசாங்க அதிபர் அந்தோனி முத்து, வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம் சாள்ஸ், அமைச்சின் செயலாளராகவும் முன்னாள் அரசாங்க அதிபராகவும் இருந்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, உட்பட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வட கிழக்கில் உள்ள வர்த்தக நிலையங்கள் உதவ முன்வர வேண்டும்.அது மாத்திரமன்றி கடந்த யுத்த காலங்களில் செயற்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்களது விவரங்களை  அறிந்தவர்கள் அவர்கள்  தொடர்பான தகவல்களை எமக்கு 0761870151  இத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார்.

மேலும்  கடந்த கால யுத்தத்தில் தமது உயிரை துச்சமாக மதித்து கடமையாற்றிய முதன் முறையாக  இலங்கை நிர்வாக சேவை அரசாங்க அதிபர்கள் கௌரவிப்பது இது முதல் தடவை என்று நினைக்கின்றேன்.எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்தவர்களும் எமது தொழிற்சங்கத்தால் கௌரவிக்கப்பட இருக்கின்றனர். – என்றார்.