மதுபானசாலையை உடைத்து பல பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை

(க.கிஷாந்தன்)

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 10.04.2020 அன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .

இன்று அதிகாலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்ட அப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.