இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரண்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி சந்திரசேகரன் “எனது கட்சிக்காரரை இராணுவத்தினம் தேடிவந்தனர். எனினும் சிப்பாயைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றில் தாக்கல் செய்த பி அறிக்கையில் அவரது பெயர் இல்லை.

அதனால் பொலிஸாரால் தேடப்படும் நபராக அவர் உள்ளரா என்பதை பொலிஸ் தலைமையகத்தில் உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்றிருந்த சிலர், எனது கட்சிக்காரரைத் தேடியுள்ளனர். அதனால் அவரை நாளை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்” என்று தெரிவித்தார்.

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று மாலை, வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் அந்த நபரைக் கண்டித்த போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கினார். சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்தனர்.

அதனை அடுத்து மறுநாள் அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர் , இராணுவ சிப்பாயை தாக்கியவரை கைது செய்ய தேடுதல் நடாத்தி இருந்தனர். அச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் கடற்புலி போராளியான ஐங்கரன் என்பவரை தேடியே இராணுவத்தினர் சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினர் சுமார் இரண்டு வார தேடுதலின் பின்னர் இராணுவ சிப்பாயை தாக்கியவர்கள் என 8 பேரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸாரினால் சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து வந்த வாரங்களில் வழக்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.