தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை

ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்  ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் சில வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள், எங்கு கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்களைத் திரட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராஜா முறைப்பாடு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இராணுவம் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜூலை ஐந்தாம் திகதி எங்களின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி இரண்டு தடவை தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டார் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சி செல்லும் வீதியில் அது இடம்பெற்றது என்பதை தான் உறுதி செய்ததாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இவ்வாறே அச்சத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் இராணுவத்தின் மோசடியை குறித்த அதிகாரிகள் எவ்வாறு தெரிவிப்பார்கள் என்றும் கேள்விழுப்பினார்.

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனம் முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது வாகனத்தில் அடையாள அட்டை அளவைக்கொண்ட வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட காட் காணப்பட்டுள்ளது அவை முறையானவை என குறிப்பிட்டுள்ள ஹூல் சுவரொட்டிகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளன ஆனால் இராணுவம் வாகனத்தை நிறுத்தி அட்டைகளை பறிமுதல் செய்தது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 17 ஆம் திகதி அன்று ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் அளித்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளில் தேர்தலின் போது இராணுவம் நிறுத்தப்பட மாட்டாது, பொலிஸார் மட்டுமே பயன்படுத்தப்படுவர், சுகாதார வழிகாட்டுதல்கள் வர்த்தமானி செய்யப்படும் என்பதையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.