சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை இப்ராஹிம் நபியின் தியாகங்களில் உணர முடியும்…

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை இப்ராஹிம் நபியின் தியாகங்களில் உணர முடியும்…!

ஹஜ்ஜின் தியாகங்கள், சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை உணர்த்துவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகப் பயங்கரமான சூழலில் வாழ்ந்த நாம், இன்று ஓரளவு அச்சம் நீங்கிய சூழலில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் வாழ்க்கை, தியாகம், அவரது துணிச்சல்கள் அனைத்தும், சமூக வாழ்வின் இலட்சியங்களுக்கு எடுத்துக்காட்டு.

அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து, தமது மகனையே பலியிடத் துணிந்தமை, இறைவனின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான மிகப் பெரிய துணிச்சலையே உணர்த்துகிறது. தமக்கென்று வருகின்றபோது, பின்னர் அது சமூகமாக மாறிவிடும். இதனையே இறைதூதர் இப்றாஹிம் எடுத்துக்காட்டியிருந்தார்.

தமது மகனையே பலியிடத் துணிந்த வரலாற்றில், எமக்கான படிப்பினைகள் பல உள்ளன. சமூகத்துக்கான பணிகளை நிறைவேற்றுவதற்கு எந்தப் பெறுமதிகளும் தடையாகக் கூடாது. எந்தக் கடமைகள், வேலைகளானாலும் இலட்சியங்கள் முக்கியமானவை. எனவேதான், இன்று பல தடைகளை எதிர்கொண்டுள்ள முஸ்லிம்களும் தியாகங்களுக்குத் தயாராக நேரிட்டுள்ளன.

சமூகத்துக்கென்று வருகின்றபோது, தியாக சிந்தனையில் நாம் ஒன்றுபட வேண்டும். ஆட்சி, அதிகாரங்களில் ஒட்டிக்கொண்டுதான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. தேவை ஏற்பட்டால் பட்டம், பதவிகளைத் தியாகம் செய்தேனும், சமூக இலட்சியத்தை வெல்ல வைக்க வேண்டும். இதைத்தான் ஹஜ்ஜூடைய வணக்கம் எமக்கு உணர்த்துகிறது.

சமூகக் கடமையைக் கொண்டாடும் நாம், இன்று எமது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தீங்குகளைத் துடைத்தெறிய, இலட்சிய யாத்திரைக்குத் தயாராகும் நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.