இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர் – அரவிந்தகுமார்…

(க.கிஷாந்தன்)

ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே  மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு  மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

பதுளை, லுணுகலை ஹொப்டன் பகுதியில் 01.08.2020 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடும் குளிர், மழை என்பவற்றைக்கூட பொருட்படுத்தாமல் எமக்காக மக்கள் அணிதிரள்கின்றனர். கூட்டம் நடைபெறும் இடங்களிளெல்லாம் இதனைக்காணக்கூடியதாக இருக்கின்றது. இது அன்பால் சேர்ந்த கூட்டம், ஆதரவாளர்களின் ஒருமித்தக் குரலோடு சங்கமித்த கூட்டம். இவ்வாறான ஆதரவும், ஒற்றுமையுமே மலையகத்துக்கு தேவைப்படுகின்றது.

நாம் வெவ்வேறான தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்தாலும் சமூகம் என வரும்போது இணைந்து பயணித்தால்தான் இலக்கை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

பிரச்சாரங்களுக்காக தோட்டங்களுக்கு செல்லும்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்கும்வரை ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை என்பதுதான் எனது பதிலாக இருக்கின்றது. எனவே, கிடைக்காத ஒன்றை கிடைக்கும் என கூறி மக்கள் மத்தியில் ஏமாற்றுகாரனாக வலம்வருவதற்கு நான் தயாரில்லலை.

உண்மையை பேசினால் சிலர் அபசகுணம் என விமர்சிக்கின்றனர், ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்றால், மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் இந்த ஆட்சிமாறவேண்டும். அதன் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஏழைகளின் தோழன், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடியவர், அவர் பிரதமரானால் மாத்திரமே சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்பும் பாதுகாக்கப்படும். ஏனெனில் இன்று இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. சாதாரண மனிதம் குறித்து சிந்திக்காத கொடூங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டவேண்டும். ” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.