சமஷ்டியை உதறியெறிந்துவிட்டு தீர்வு கேட்க வேண்டும் சம்பந்தன் – இப்படிச் சொல்கின்றார் மஹிந்தர்…
“நாட்டைப் பிளவுபடுத்தும் சமஷ்டி வழியிலான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கேட்கின்றார். முதலில் அவர் சமஷ்டியைத் தூக்கி வீசிவிட்டு பொதுவான தீர்வைக் கேட்க வேண்டும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காவத்தையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முப்பது வருட கால மிருகத்தனமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றோம். துரதிர்ஷ்டவசமாக, 2015 இல், நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்ததால் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தடைப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு மாபெரும் தலைவர். அவரின் கொள்கைத்திட்டத்தை நாம் வெற்றிகரமாக செயற்படுத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வலுவான நாடாளுமன்றத்தை நிறுவ வேண்டும். இதற்குப் பொதுமக்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை.
எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்காக – ஒளிமயமான எதிர்காலத்துக்காகப் பாடுபடும் எமது கட்சிக்கு உங்கள் மதிப்புமிக்க பொன்னான வாக்குகளை எதிர்வரும் 5ஆம் திகதி வழங்குங்கள்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை