மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி; இரங்கல்…

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்டத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு,
70க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தியைப் பார்த்து மிகுந்த
அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து
மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறி இருக்கின்றார். அங்கே ஊழிக் காற்று
வீசுவதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்றும், சாலைகள் அனைத்தும் அடைபட்டுக்
கிடப்பதாலும் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி
இருக்கின்றார். எப்படியும் தான் அங்கே போய்விடுவேன் என்று அவர் தெரிவித்து இருப்பதுடன், மீட்புப்
பணிகள் விரைவாக நடைபெற ஆவன செய்திருப்பதாகவும் கூறி இருக்கின்றார்.

கேரள மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கி இருக்கின்ற குடியிருப்புகள் பாதுகாப்பாக
இல்லை என்பதை இந்த நிலச்சரிவு படம்பிடித்துக் காட்டி இருக்கின்றது.
எனவே இனியாவது தேயிலைத் தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்கள் குடியிருப்பைப்
பாதுகப்பான இடங்களில் அமைத்திட வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்த வகையிலும் ஆறுதல் கூறி தேற்ற இயலாது. அந்தக்
குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட கேரள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல்
கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.