ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்டம் காணச் செய்வோம்- சஜித் அணி சூளுரை

“நாட்டின் ஆட்சிப்பீடத்திலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புக்களில் ராஜபக்ச குடும்பத்தினரே அங்கம் வகிக்கின்றனர். இந்த ராஜபக்ச குடும்பத்தினரை நாம் விரைவில் ஆட்டம் காணச் செய்வோம்.”

– இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுத்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்கு மஹிந்த ராஜபக்சவின் கடந்தகால ஆட்சியின்போது உறுதியாகியிருந்தது. இந்த நிலைமை மீண்டும் தோற்றம் பெறுமா என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ராஜபக்சகளின் குடும்ப ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதனைப் பலப்படுத்துவதற்காகவும் 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சித்து வருகின்றனர்.

அரசுக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதனால் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கு ஆளும் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதாக இருந்தால் , எதற்காக 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள். ஆளும் தரப்பைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து வருகின்ற போதிலும் அரசு அதனை நீக்கும் எண்ணத்திலேயே இருக்கின்றது.

இடைக்காலக் கணக்கறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் 38 சதவீதமான நிதி ராஜபக்சக்களின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்கள் மற்றும் நாட்டின் உயர்மட்டத்திலான தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்க முற்படுகின்றார்கள்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பஸில் ராஜபக்ச அமெரிக்கப் பிரஜை என்பதால் , அவருக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டே 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சித்து வருகின்றார்கள்.

இதேவேளை, அமைச்சு நியமனங்களுக்கும் 19 ஆவது அரசமைப்பு திருத்தத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமது தரப்பைச் சேர்ந்த பலருக்கு மேலும் அமைச்சுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியிருப்பதாலே அதனை நீக்க அரசு முயற்சிக்கின்றது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்சவுடன் நேரடியாக இணைந்துகொள்ளாத பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாது திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

19ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு 5 வருடங்களே கழிந்துள்ளன. இதில் பல சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்களில் ஏதாவது சிக்கல்கள் காணப்பட்டால் அவர்கள் தொடர்பில் சபாநாயகர் வினவி நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது நாடாளுமன்றம் செயற்படுவதுடன் சபாநாயகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் அவர் சுயாதீனமாகச் செயற்படுவார் என்று நாங்கள் எண்ணுகின்றோம்” – என்றார்.
………….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.