சபை அமர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தீர்மானம்…

இலங்கையில் கொரோனா பரவல் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ள நிலையிலும் நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வழமைபோன்று நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அன்று மாலை 4.30 முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

21ஆம் திகதி மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்று மாலை 4.30 முதல்  5.30 மணி வரை
எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதம் நடைபெறும்.

ஒக்டோபர் 22ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் 4.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் தற்போதைய சுகாதார நிலைமைகள் பற்றி சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

அத்துடன், நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த மறைந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான அமரர் சுரங்கனி எல்லாவல, அமரர் ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ அமரர் கே.பி.சில்வா ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

ஒருவேளை, 20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகர்  ஊடாக சபைக்கு அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை மீண்டும் கூட்டி, 20ஆவது திருத்தத்தை விவாதிக்கும் வகையில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றம் செய்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,  ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல,  அமைச்சர்களான சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார, அலி சப்ரி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, அநுரகுமார திஸாநாயக்க, ரிஷாத் பதியுதீன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட் தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.