கட்டுமீறும் ‘கொரோனா’ 22 மாவட்டங்கள் இலக்கு…
கட்டுமீறும் ‘கொரோனா’
22 மாவட்டங்கள் இலக்கு
பேராபத்துக் காத்திருக்கின்றது என
எச்சரிக்கின்றார் இராணுவத் தளபதி
“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவல் நாட்டில் 22 மாவட்டங்களைப் பாதிப்படையச் செய்துள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 1700 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சகல இடங்களிலும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”
– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மினுவாங்கொடை கொத்தணிப் கொரோனா பரவலை நாம் உடன் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பேராபத்தைச் சந்திக்க வேண்டி வரும்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று அங்கு பணியாற்றுபவர்கள் மூலம் பல்வேறு தரப்பினருக்கும் பரவலடைந்து வருகின்றது.
தனது கணவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அறிந்தும் பணிக்குச் சென்ற பெண்ணால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் பலருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவன் மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றார்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை