கொரோனா அபாயத்தால் கல்முனை மாநகர சபைக்கு பெருந்தொகை வருமானம் இழப்பு…

கொரோனா தொற்று அபாய சூழல் காரணமாக கல்முனை மாநகர சபைக்கு பெருந்தொகை வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (15) இரவு, மாநகர மேயர் தலைமையில் மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

கல்முனை மாநகர வாழ் மக்களின் பிரதிநிதிகளான மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரினதும் ஆலோசனைகளை உள்வாங்கி மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை ஆக்கபூர்வமானதும் சாத்தியமானதுமான முன்மொழிவுகளுடன் சிறப்பாக தயாரிக்கும் நோக்குடனேயே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக மேயர் றகீப் தலைமையுரையின்போது தெரிவித்தார்.

இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற பட்ஜெட், மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, அவர்களது கருத்துக்களும் பெறப்படும் எனவும் அது தொடர்பில் பத்திரிகை விளம்பரம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது இவ்வருட பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டிருந்த பல வருமானங்கள் கொரோனா தொற்று அபாய சூழல் காரணமாக கிடைக்கவில்லை. இதனால்தான் மாநகர சபைக்கு பெருந்தொகை வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் மேயர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்க வேண்டிய உத்தேச வரவுகள் மற்றும் செலவுகள் குறித்த அறிக்கையை கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் சமர்ப்பித்து, விளக்கமளித்தார்.

இதன்போது உறுப்பினர்கள் பலரும் பல்வேறுபட்ட முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் பிரதிநிதிகளும் மாநகர ஆணையாளர், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதற்கு முன்னதாக கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உப குழு இரண்டு தடவைகள் கூடி உத்தேச முன்மொழிவுகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.