காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்…

பாறுக் ஷிஹான்

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் .அவர்கள் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர் என  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.

 அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என கல்முனையில் தெரிவித்த கருத்தினை பொதுஜன பெரமுனவின் கல்முனை மத்திய குழு இன்று(18) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு    மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி என கூறி திரிபவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலான இவ்விடயத்தை வைத்து அரசியல் செய்கின்றார்.எமது அரசாங்கத்தை அடிக்கடி சங்கடப்படுத்துகின்றார்.சமூகமாக உள்ள உறவுகளை சீர்குலைக்க கல்முனை பகுதிக்கு வந்து இவ்வாறான செய்தியாளர் மாநாட்டை நடத்துவது சந்தேகத்திற்குரியது.இதற்கு சில ஊடகவியலாளர்கள் என கூறி திரிபவர்கள் உடந்தையாக உள்ளனர்.இவ்வாறாக  ஊடகவியலாளர் பெயரை கொச்சைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் அடையாளப்படுத்த வேண்டும்.இவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்று ஊடக சுதந்திரத்தை வைத்துக்கொண்டு இவ்வாறான வங்குரோத்து சங்க தலைவி போன்றவர்களை கூட்டி வந்து மாநாடு என்ற போர்வையில் வெளிநாட்டிற்கு வீடியோக்களை அனுப்பி எமது அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உட்படுத்துகின்றனர்.
 

இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் ஏலவே பதில் வழங்கி விட்டது.ஆனால் இவர் தான் சித்த சுவாதினமற்றவர் போன்று குழம்புகின்றார்.இவரை காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தில் இருந்து நீக்கியதாக செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தமை யாவரும் அறிவர் இவர் போன்றவர்கள் இப்படியான அப்பட்டமான பொய்களை சொல்லி  எமது அரசுக்கு அவப்பெயரை காலாகாலம் மேற்கொண்டுள்ளனர். எனவே அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக போராடுவதாக எமது நாட்டிற்கு அவப்பெயரை கூறி வரும் இவ்வாறானவர்களின் கருத்துக்களை   வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான  விடயங்கள் தொடர்ந்தால்  நாங்கள்  இதற்கு எதிராக போராட தயாராக இருக்கின்றோம் என சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.