ஊடக செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டார்…

ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை 2.15 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற பேரூந்தில் ஏறி பயணித்து, மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக இறங்கியுள்ளார். அதன் பின் குறித்த இளைஞன் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிசில் முறைப்பாடு செய்திருந்ததுடன், வவுனியா பொலிசாருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து மன்னார் பகுதியில் குறித்த இளைஞன் நின்றதை அவதானித்தவர்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞனின் உறவினர்கள் மன்னாரிற்கு சென்று குறித்த இளைஞனை மீட்டுள்ளனர். இதனால் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன அழுத்தம் காரணமாக இடம்தெரியாது குறித்த இளைஞன் மன்னார் சென்றுள்ளதாக தெரியவரும் அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.