கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை…

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கிருஷ்ணபுரம் பொது அமைப்புக்கள் கூட்டாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.19.10.202 திகதியிடப்பட்டு குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் குறித்த கொரோனா வைத்தியசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது தொடர்பில் இராணுவத்தளபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது கிராமத்தில் பல்வேறு இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அதாவது 1977, 1983 காலப்பகுதியில்நாட்டில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி பல்வேறு இன்னல்களிற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
எமது கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடம் என்று அன்றைய காலத்தில் 12 ஏக்கர் காணியில் இயங்கி வந்த கட்டடத் தொகுதி பின்னர் இராணுவ பயிற்சி முகாமாக இயங்கி வந்தது. குறித்த பகுதி சிறிது நாட்களிற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தருணம் எமக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த விடயமாக இருந்தது. தற்பொழுது வந்துள்ள செய்தியானது எமது மகிழ்ச்சியில் இடி வீழ்ந்துள்ளது.
இந்த நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 75 மீட்டர் தூரத்தில் கிளிநொச்சி இராமகிருஸ்ண வித்தியாலயம் அமைந்துள்ளது. கிராம அலுவலர் அலுவலகம், சமுர்த்தி அலுவலகம், அபிவிருத்தி உத்தியோகத்தரின் அலுவலகம் போன்றவையும் 75 மீற்றர் தூரத்திற்குள் அமைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த பாடசாலையில் 80 மாணவர்கள் வரையில் கல்வி கற்கும் அதே நேரம் ஆசிரியர்கள் உட்பட 100பேர் அங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலகம் போன்றவற்றில் நாளாந்தம் 100க்கு மேற்பட்ட மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வது வழக்கமான இடமாகவும் அமைந்துள்ளது. எமது கிராமத்தின் அனைத்து நிர்வாக செயற்பாடுகள் இடம்பெறும் மிக முக்கிய மையப்புள்ளியாகவும் குறித்த பகுதி காணப்படுகின்றது. அதேவேளை 937 குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது  கொரோனா மத்திய நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையிட்டு எமது கிராம மக்கள் பெரும் பயப்பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் குறித்த நிலையத்தை இங்கு அமைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஸ்ணபுரத்திலும் கொரோனா வைத்தியசாலையை அமைக்க இராணுவத்தினர் தயாராக உள்ளதாக கடந்த ஓரிரு நாட்களிற்கு முன்னர் இராணுவத்தளபதி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மருதங்கேணி பகுதியில் குறித்த வைத்தியசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஸ்ணபுரம் மக்கள் இவ்வாறு கடிதம் ஒன்றினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.