மட்டக்களப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சரின் சொந்த இடமான
இரத்தினபுரியிலிருந்து ஊழியர்களை நியமிக்காமல் மட்டக்களப்பை
சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்த
ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனாவிற்கு
மட்டக்களப்பிலிருந்து இரண்டு வைத்தியசாலைகள் கரடியனாறு மற்றும்
காத்தான்குடி பகுதிகளில் தெரிவு செய்யப்படுள்ள அதேவேளை கரடியனாறு
வைத்தியசாலையானது மிகவும் பிரதான வளங்கள் இன்றி பின்தங்கி காணப்படுகின்றது.

அங்கு MLT மற்றும் பரிசோதனை கூடங்கள் இல்லை. மற்றும் எமது மாவட்டத்தில்
வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் மற்றும் மருத்துவ ஊழியர்கள்
பற்றாக்குறை நெடுநாட்களாக காணப்படுகின்றது. அத்துடன் இவர்களுக்கான
வெற்றிடங்கள் பல காணப்படுகின்றது. இவற்றினை கருத்தில் கொள்ளும்படியும்.

அத்துடன் எமது மாவட்டம் எதிர்கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு போன்ற அனர்த்த
நிலைமைகளை எதிர்காலத்தில் சமாளிப்பதற்கான ஓரளவு வசதிகள் கொண்டதாக போதனா
வைத்தியசாலை காணப்படினும் அங்கும் பல வளங்கள் பற்றாக்குறையாகவே
காணப்படுகின்றது.

அத்துடன் தற்பொழுது தாதிய மேல்நிலை உத்தியோகத்தர்களாக வெளிமாவட்டங்களை
சேர்ந்தவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுள்ளனர். அது போன்றே தாதியர்கள்
மற்றும் வைத்திய ஊழியர்கள் சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன இருந்த
போது பொலநறுவையில் இருந்தும் நிமால் சிறிபாலடி சில்வாவின் காலத்தில்
பதுளையில் இருந்தும் பாரியளவில் நியமிக்கப்பட்டார்கள்.

அதே போன்று இனிவரும் காலங்களில் சுகாதார அமைச்சர் இரத்தினபுரியில் இருந்து
ஊழியர்களை நியமிக்காமல் மட்டக்களப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
அளியுங்கள்.

அத்துடன் எமது மாவட்டத்துக்கான வைத்திய சுகாதார பிரச்சனைகளை தீர்ப்பது
சம்பந்தமான 15 பக்க மகஜர் ஒன்றினையும் தற்போது சுகாதார அமைச்சரிடம்
கையளிக்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.