ஒரு இலட்சம் தொழில் வாய்பின் கீழ் நியமனக் கடிதங்கள் கையளிப்பு
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்
பிரகடனத்துக்கமைவாக வறுமையில்லாத இலங்கையை உருவாக்குதல்’ எனும் பிரதான
குறிக்கோளின் அடிப்படையில், ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும்
விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை
பிரதேசத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக்
கடிதங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நற்பிட்டிமுனை மக்கள் இணைப்பு
காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக்குறைந்த கல்வித்
தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலினை பெற்றுக் கொடுத்து
அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின்
சிந்தனைக்கமைவாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் றபீக் இராஜாங்க அமைச்சர்
விமலவீர திஸாநாயக்காவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்நியமனங்கள்
வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ஏ.எல்.முஹம்மட் றபீக் ஓய்வு பெற்ற உதவி அதிபர் எம்.எச்.ஜலாலுதீன்
உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான
நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
(பாறுக் ஷிஹான்)
கருத்துக்களேதுமில்லை