ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் மனிதாபிமான ரீதியில் செயற்படுவார் என எதிர்பார்க்கிறேன் -மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யும் ஜனாதிபதி, சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் மனிதாபிமான ரீதியில் செயற்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் மேலும் தெரிவிக்கையில், கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும், சிறு குற்றங்களைப் புரிந்த அதிகளவான கைதிகளையும் மனிதாபிமான ரீதியில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்து வருகின்றார்.

இந்நிலையில் 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை பெற்றுள்ள ஜனாதிபதி சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான விசாரணைகளை முன்னெடுக்கவும், அதனை விரைவு படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அவர்களது விடுதலை பற்றியும் சிந்திக்க வேண்டும். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அரசியல் கைதிகள் தாம் எப்போது விடுதலை செய்யப்படுவோம் என்று தெரியாமலேயே தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து வருகின்றார்கள். இப்போது இவர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் நலிவடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் தமது இறுதி காலத்தையாவது தங்கள் குடும்பத்துடன் செலவிடுவதற்கான உயரிய வாய்ப்பை ஜனாதிபதி வழங்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்கும் முகமாக இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்வார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.