தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள் – சுகாதார வைத்திய அதிகாரி

” கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து, தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள்.  அவ்வாறு வரும்பட்சத்தில் முழு குடும்பத்தையும் சுயதனிமைக்கு உட்படுத்தவேண்டிய நிலைஏற்படும்.” – என்று மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

 

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று வரை (07.11.2020) மொத்தமாக 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் கூறியதாவது,

” மஸ்கெலியா ‘எம்.ஓ.எச்.’ பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் பேலியகொடை மீன்சந்தை கொத்தணி பரவலுடன் தொடர்புபட்டவர்களாவர்.

அதேவேளை, எமது மலையக மக்களில் சிலர் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் முதலாளிகளாக இருக்கின்றர்.  தொழில் புரிபவர்களும் இருக்கின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்துக்கு குறிப்பாக நகரப்பகுதிகளிலும், பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு வருவதற்கு முயற்சிக்ககூடும்.

 

ஆனால் கொழும்பு, கம்பஹா உட்பட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்மிக்க மாவட்டங்களில் இருந்து மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவர்கள் வருகைதருவதன்மூலம் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்ல அவர்கள் அவ்வாறு வந்தாலும் இங்கு சுயதனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள், சிறிய வீடுகள் என்பதால் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

 

எனவே, தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே இம்முறை சுகாதார பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.