நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருகோணமலை வருகையை அடுத்து விசாரணைகளை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரன் அவர்களை விசேட புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.
 அதனை உறுதிப்படுத்திய அவர் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கந்தளாய் காவல்துறைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவ்வழைப்பை எழுத்துமூலமாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனையடுத்து கடந்த 09.11.2020 அன்று கடித மூல அழைப்பின் பேரில் 10.11.2020 அன்று விசாரணைகளுக்கு கந்தளாய் விசேட புலனாய்வுப் பிரிவில் தான் சமூகமளித்திருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தவருட மாவீரர் தின நினைவேந்தல் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரி; தெரிவித்ததாகவும் அதனை முன்நிறுத்தியே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சிங்களத்தில் எழுதப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த அறிக்கையை தான் வாசித்து விளங்கமுடியாதிருப்பதால் அதனைக் குறிப்பிட்டுக் கையெத்திட முயன்றபோது அவ்வாறு செய்யத் தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான  செல்வராசா கயேந்திரன் ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் திருகோணமலையில் மக்கள் சந்திப்புக்களை நடாத்தியிருந்ததுடன் கட்சி உறுப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர். இச்சந்திப்புக்களில் மாவீரர் தினத்தை நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணைகளின் போது கேட்கப்பட்டுள்ளது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடிப்படைப் பாதுகாப்பில் வலம்வரும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலைக்கு வந்து செல்வது விசாரணைக்கு உட்படுத்தப்படாமலுள்ள நிலையில் எவ்வித அரச ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் இல்லாமல் மக்களின் பாதுகாப்பில் மட்டும் நம்பிக்கைகொண்டு மக்கள் சந்திப்புக்களை நடாத்திவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை மாவீரர் நாளுடன் தொடர்புபடுத்தி விசாரிப்பது விசனத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.