200 இற்கு 200 புள்ளிகள் பெற்று மாணவர்கள் சாதனை !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உச்சபட்ச புள்ளியான 200 இற்கு 200 புள்ளிகளை நாடளாவிய ரீதியில் 8 மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருதானை ஸாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் பர்சான் மொஹமட் அம்மர் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்.

  1. மொஹமட் பர்சான் மொஹமட் அம்மர்
  2. இங்கிரிய, சுமணஜோதி வித்தியாலத்தின் தெவ்லி யசஸ்மி
  3. திம்புலாகலை சிறிபுர கனிஷ்ட கல்லூரியின் தேனுஜ மனுமித
  4. இரத்தினபுரி, எஹெலியகொடை கனிஷ்ட வித்தியாலயத்தின் செனுதி தம்சரா
  5. எம்பிலிபிட்டி ஜனாதிபதி கல்லூரியின் தொவிந்து சிரஞ்சித்
  6. காலி சங்கமித்தா வித்தியாலயத்தின் சியதி விதும்சா சந்துனி
  7. அக்குரஸ்ஸை ஹேவகே சிஹத் சந்தினு
  8. யெஹாரா யெத்மினி ஏபா ஆகியோரும் இவ்வாண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் மற்றும் புலமைப்பரிசிலை பெறுவதற்கான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் நேற்று (15) இரவு, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இம்முறை, கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்றது.

இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த முறை முதல் அமுல்படுத்தப்பட்டவாறு, இம்முறையும் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல் (Rank) மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் வெட்டுப்புள்ளிகள், அந்தந்த மொழி மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் பிரிவில், அவர்கள் பெற்ற புள்ளிகளுடன் அவர்கள் புலமைப்பரிசில் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் விசேட அறிவிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட User Name மற்றும் Password இனை பயன்படுத்தி, உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி, அச்சிட்டு பெற முடியும் என்பதோடு, மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களும் இம்முறை மூலம் மாகாண, வலய மட்ட பெறுபேறுகளை பெறுவதற்கான வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.