மல்லாகம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் நினைவேந்தல் தடை மனுக்கள் ஒத்திவைப்பு…

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொலிஸாரின் மனுக்களை மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்கள் ஒத்திவைத்துள்ளன.

மல்லாகம் நீதிமன்றம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்  காங்கேசன்துறை பொலிஸார் இன்று மனுத் தாக்கல் செய்தனர்.

எதிர் மனுதாரர்களாக மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் உட்பட்டோர் குறிப்பிடப்பட்டனர்.

இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

“பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.

அதனால் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலைச் சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

பருத்தித்துறை நீதிமன்றம்

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திததி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

இந்த மனு அழைக்கப்பட்ட போது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், சந்திரசேகரம், செலஸ்ரின் உள்ளிட்ட 6 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

“பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

அதனால் வழக்கை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைத்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலைச் சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.