நோர்வூட் பிரதேச சபை ‘பட்ஜட்’ மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு…

(க.கிஷாந்தன்)

நோர்வூட்  பிரதேச சபையானது காங்கிரஸின் சபை என்றும், எதிரணி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கமுடியாது எனவும் குறித்த சபையின் உப தலைவர் வெளியிட்ட கருத்துக்கு  கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிடும் வகையில் ‘பட்ஜட்’ மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் இன்று (19) வெளிநடப்பு செய்தனர்.

2021 ஆம்  நிதியாண்டுக்காக நோர்வூட் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையில் இன்று (19.11.2020) நடைபெற்றது.

பிரதேச சபையின் செயலாளர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கடந்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் ஆரயப்பட்டுள்ளன.

இதன்போதே ஏற்பட்ட சர்ச்சையையடுத்தே முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவரும், பொகவந்தலாவ வட்டார உறுப்பினருமான பா. சிவநேசன்,

” 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் ஊடாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினேன். ஆனால், வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர். அவ்வாறு வட்டாரத்துக்கும் ஒதுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினேன்.

சபை ஆரம்பமாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. மக்களுக்கு சேவையாற்றாமல் வெறுமனே கதிரையை சூடாக்கிக்கொண்டிருப்பதில் பயனில்லை எனவும் குறிப்பிட்டேன். இதன்போது பிரதேச சபையின் உப தலைவர் கிசோக்குமார் என்பவர்,
உங்களுக்கு இங்கு நிதி ஒதுக்கப்படாது. இது இ.தொ.காவின் நிர்வாகத்தின்கீழ் உள்ள சபை என்றார்.

இ.தொ.காவின் சபை என்றால் அதனை சி.எல்.எவ் இற்கு கொண்டுசெல்லுங்கள். இது மக்களுக்குரிய சபையாகும். எதிரணி உறுப்பினர்களுக்கும் உரிமை இருக்கின்றது என நான் வாதிட்டேன்.

உப தலைவர் இவ்வாறு கருத்து வெளியிட்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாமல் சபை தலைவர் மௌனம் காத்தார்.  மக்களுக்கான சபையை தனிக்கட்சி உரிமை கொண்டாடமுடியாது. அதனை கண்டிக்கின்றோம். இனிவரும் நாட்களில் சபை அமர்வுகளில் பங்கேற்பது பற்றியும் ஆராயவேண்டும். முற்போக்கு கூட்டணியால்தான் இந்த சபையே உருவானது. ” என்றார்.

நோர்வூட் பிரதேச சபை தலைவரின் கருத்து…..

இது தொடர்பில் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலுவிடம் வினவினோம்.

” இன்று சபையின் பொது அமர்வோ அல்லது பட்ஜட் விவாதமோ நடைபெறவில்லை. ஒரு கலந்துரையாடல் மட்டுமே நடைபெற்றது. எதிரணி உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்குவதற்காகவே அழைத்திருந்தோம். இதுகூட புரியாமல் கூட்டத்தை குழப்பும் வகையில் செயற்பட்டனர். தனி நபர்களுக்கென நிதி ஒதுக்கமுடியாது. தொகுதிகள் இருக்கின்றன. அதற்குதான் ஒதுக்கமுடியும். அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை வட்டார உறுப்பினர் பயன்படுத்தலாம். உப தலைவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டும் ஏற்புடையது அல்ல. அவர் எந்த கட்சி உறுப்பினர் எனக் கேட்டனர், அதற்கு இ.தொ.கா. என பதிலளித்தார். அதனை வைத்து பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.