தமிழரின் பாரம்பரியம் சிதைப்பு! நாடாளுமன்றில் -சிறிதரன்

சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை இழந்து நிற்கின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே உறுதிசெய்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் பிட்டும் வடையும் உண்ட நிலையிலிருந்து பீட்ஸா உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்ததாக யாழ். தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை உரையாற்றிய சிறிதரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழ்ந்த மக்களாவர்.

அவர்கள் தமக்கே உரிய பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களோடு இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது உணவுப் பழக்க வழக்கங்களையே இழந்து, தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையிலும் தமது பாரம்பரியங்களை இழக்கக்கூடாது என்பதற்காகவே அம்மாச்சி போன்ற உணவகங்கள் மூலம் தமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரியொருவர் எமது மக்களைப் பிட்டும் வடையும் உண்டு கொண்டிருந்த நிலையிலிருந்து பீட்ஸா உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.

ஆனால், உண்மையில் அவர்கள் எமது மக்களைச் சிதைத்து, படுகொலை செய்து, சின்னாபின்னப்படுத்தியிருக்கின்றார்களே தவிர வேறெந்த நல்ல விடயங்களையும் செய்யவில்லை.

எனவே, அவர்கள் சுயத்தோடும் இறைமையோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே நிலைநாட்டியிருக்கின்றன என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.