பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது – ஜீவன் தொண்டமான்

தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது.  நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும். எனவே, தொழிலாளர்களின் நலன்களுக்காக தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியை இணைக்கும் தோட்டப்பாதைகளில் ஒன்றான கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (22) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுமார் 80 மில்லியன் ரூபா செலவில் 4.45 கிலோமீற்றர் கார்பட் இட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள குறித்த பாதையானது, குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாததன் காரணமாக கடந்த காலங்களில் பொது மக்கள் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாதைகள் புனரமைக்கப்படும் என தேர்தலின்போது நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டுவருகின்றது. இதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றார்.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து, ஊடகங்களின் முன்னிலையில் வீராப்புபேசும் அரசியல் கலாச்சாரத்தை நான் பின்பற்றவில்லை. ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், மக்களுக்கு சேவையாற்றும் சிறந்த நிர்வாகியாக இருக்கவே நான் விரும்புகின்றேன். எனவே, என்னை வேலை செய்ய விடுங்கள், மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

பெருந்தோட்ட மக்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் எந்தவொரு ஒதுக்கீடும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார். பெருந்தோட்ட மக்கள் என்பவர்களும் இலங்கையர்களே, அவர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல. எனவே, ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கே வரவு – செலவுத்திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ரூபா சம்பளம், மலையக பல்கலைக்கழகம், நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலை போன்ற நல்ல திட்டங்கள் பட்ஜட்டில் இருந்தும் எதிரணியிலுள்ள மலையக அரசியல்வாதிகள்இ அதனை ஆதரித்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம் மக்களைவிடவும் அவர்களுக்கு அரசியலே முக்கியம் என்பது உறுதியாகின்றது.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. உண்மையில் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல. மாறாக கம்பனிகளைக்கட்டுப்படுத்துவதற்காகவே அது அமுலில் உள்ளது.

ஆயிரம் ரூபாவுக்கான யோசனை வந்துள்ள நிலையில் தற்போது அடிப்படை சம்பளமாக ஆயிரம் வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் உண்மை எது என்பது மக்களுக்கு தெரியும். கட்சி ரீதியாக மக்கள் பிரிந்திருக்கலாம். சிலர் நடுநிலையாக இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க ரீதியில் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கம்பனிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும்.  ” – என்றார்.

 

 

(க.கிஷாந்தன்)

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.