மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் ஜீவன்தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம் – ராமேஷ்வரன்

 மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியை இணைக்கும் தோட்டப்பாதைகளில் ஒன்றான கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (22) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது  மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்தன. எனினும் நல்லாட்சி வந்ததும் அரசியல் காரணங்களுக்காக அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ஆனால் எமக்கு  மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையக மக்களுக்காக எவற்றையெல்லாம் செய்யவேண்டும் என எமது தலைவர் எதிர்ப்பார்த்தாரோ அவற்றையெல்லாம் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் செய்வோம். எமக்கு ஒத்துழைப்பு, உதவி வழங்கக்கூடிய இருவரே நாட்டின் ஜனாதிபதி, பிரதமராக இருக்கின்றனர். எனவே, எவ்வித தடையுமின்றி செய்வோம்.

மலையக பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்மொழி தேசிய பாடசாலை வரவுள்ளது. அதேபோல தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவையும் நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அதற்கா ன சக்தி இருப்பதாலேயே வரவு – செலவுத் திட்டத்திலேயே அதற்கான யோசனை முன்மொழியப்பட்டது.

வடக்கு, கிழக்கு, மலையகம் என தனித்தனியாக வரவு – செலவுத் திட்டங்களை முன்வைக்கமுடியாது. இலங்கை மக்களுக்காகவே வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, அவர்கள் பட்ஜட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுவதை ஏற்கமுடியாது.” – என்றார் ரமேஷ்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.