சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான (10)இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது 1373 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் இன்றைய பன்னாட்டு மனித உரிமை நாளில், தமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிப்பதாக தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில்,  மனித உரிமைகள் நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீீீீதியில் நாம்,குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள் ,கோட்டா அரசே    நீ கொண்டு போனவர்கள் எங்கே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாறும்,  “எங்கே   எங்கே உறவுகள்    எங்கே , வேண்டும் வேண்டும்     நீதி வேண்டும்”  என பல கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினுடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படது.

மேலும் இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.