நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கினிகத்தேன பகுதியில் 18 பேருக்கும், பொகவந்தலாவயில் ஐவருக்கும்  மற்றும் தலவாக்கலை, வட்டகொடை உட்பட ஏனைய சில பகுதிகளில் 9 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொதுசுகாதார அதிகாரிகள் முன்னெடுத்தனர். அத்துடன், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன பகுதியில் அம்பதலாவ, குறுந்துகொள்ள, யாஹிந்ந, பிட்டவல, கலுகல்ல, பொல்பிட்டிய, மற்றும் கீக்கியனகெதர ஆகிய பகுதிகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மெலிபன் எனும் தொழிற்சாலையிலும் ஐவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பொகவந்தலாவ, தலவாக்கலை, கொட்டகலை, வட்டகொடை, மடக்கும்பரை ஆகிய பகுதிகளிலும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை வரை 298 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சில தோட்டப்பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.